செய்திகள்
மீட்கப்பட்ட யானையின் தந்தத்துடன் வனத்துறையினர்.

உடுமலை வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட யானையின் தந்தம் மீட்பு

Published On 2021-09-03 11:48 GMT   |   Update On 2021-09-03 11:48 GMT
கடந்த 29-ந்தேதி கரட்டூர், சடையம்பாறை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ஒற்றை தந்தத்துடன் இறந்து கிடந்தது.
உடுமலை:

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. வனவிலங்குகளின் பாதுகாப்பு, வெளிநபர்கள் நடமாட்டம், உணவு மற்றும் நீராதாரத்தை ஆய்வு செய்வதற்காக வனத்துறையினர் நாள்தோறும் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 29-ந்தேதி கரட்டூர், சடையம்பாறை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ஒற்றை தந்தத்துடன் இறந்து கிடந்தது. இதையடுத்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. 

உடலில் இரும்பு துப்பாக்கி குண்டுகள் இருந்தது. இதனால் யானை தந்தத்திற்காக கொல்லப்பட்டதா? அல்லது உடல்நலகுறைவால் இறந்த யானையின் தந்தத்தை யாரேனும் வெட்டி எடுத்து சென்றனரா? என கண்டுபிடிக்க உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தந்தம் கடத்தல் கும்பலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

இந்தநிலையில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரட்டூர் பகுதியில் உள்ள பாறை இடுக்கில் உர சாக்குபை ஒன்று இருந்தது. அதை வனத்துறையினர் சோதனை செய்த போது அதில் யானை தந்தம் இருந்தது.

மேலும் அது ஒற்றை கொம்புடன் இறந்த யானையின் உடம்பில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது என தெரியவந்தது. தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கும்பலை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். 
Tags:    

Similar News