ஆன்மிகம்
தங்க சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு தீபாராதனை நடந்த காட்சி.

திருச்செந்தூர் கோவிலில் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்

Published On 2021-11-08 06:08 GMT   |   Update On 2021-11-08 06:08 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 4-ம் நாளான நேற்று சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். கடலில் புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் 4-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கோவில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால தீபாராதனை நடந்த பின்னர், யாகசாலையில் உள்ள சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள ஐராவத மண்டபம் வழியாக 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்தார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் யாகசாலைக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது.

மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கோவில் கடற்கரை முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

7-ம் திருநாளான நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சூரசம்ஹாரம், திருக்கல்யாணத்தையொட்டி நாளையும், நாளை மறுநாளும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி கிடையாது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News