உள்ளூர் செய்திகள்
ஆத்தூரில் சுய உதவி குழு தலைவியிடம் பணம் கொள்ளை-சி.சி.டி.வி.காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
ஆத்தூரில் சுய உதவி குழு தலைவியிடம் பணம் பறித்த கொள்ளையர்களின் சி.சி.டி.வி.காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர பகுதிக்குட்பட்ட சாத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மங்கையர்கரசி. இவர்புன்னகை என்ற மகளிர் குழுவை நடத்தி வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் பிரதிநிதியாகவும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 22ந் தேதிஆத்தூர் காமராஜர் சாலையில் உள்ள ஸ்டேட் வங்கியில் மகளிர் குழுவின் பணத்தை வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயித்தை எடுத்துக்கொண்டு மங்கையர்கரசி, செல்வி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது மகளிர் காவல் நிலையம் அருகே மர்மநபர்கள் மங்கையர்கரசி முதுகில் ரசாயன பவுடரை தூவியதாக கூறப்படுகிறது. அதனை துடைப்பதற்காக அருகில் உள்ள டீக்கடையில் தண்ணீர் வாங்கி சுத்தம் செய்ய முயன்றபோது பணம் வைத்திருந்த பையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் மங்கையர் கரசி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து காமராஜர் சாலையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில் இருசக்கர வாகனத்தில் 2 பேர் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் குற்றவாளிகள் குறித்த வீடியோ மற்றும் புகைப் படத்தையும் போலீசார் வெளியிட் டுள்ளனர்.
வீடியோவில் ஒருவர் உட்கார்ந்து இருந்து பையை எடுத்துக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதனைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.