செய்திகள்
மயங்க் அகர்வால்

ஜாம்பவான்களுக்கு மத்தியில் பேசப்படாமல் போன மயங்க் அகர்வாலின் அற்புதமான ஆட்டம்

Published On 2019-10-22 11:21 GMT   |   Update On 2019-10-22 11:21 GMT
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஒரு சதம், ஒரு இரட்டை சதத்துடன் 340 ரன்கள் குவித்த மயாங்க் அகர்வாலின் சாதனை பேசப்படாமல் போய்விட்டது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இன்றுடன் முடிவடைந்த டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 என வென்றது.

இந்தத் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக பேசப்பட்டது. அதேவேளையில் சிறப்பாக விளையாடிய மயாங்க் அகர்வாலின் ஆட்டம் பேசப்படாமல் போய்விட்டது.

விசாகப்பட்டனத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் மயாங்க் அகர்வால் இரட்டை சதம் (215) விளாசினார். ரோகித் சர்மா சதம் (176) அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் முதல் சதத்தை பதிவு செய்த மயங்க் அகர்வால், முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய வீரர் என்ற சாதனைப் பட்டியலில் இணைந்தார்.

2-வது இன்னிங்சில் ரோகித் சர்மா 127 ரன்கள் குவித்த நிலையில், மயங்க் அகர்வால் 7 ரன்னில் வெளியேறினார். இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ரோகித் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. மயாங்க் அகர்வாலின் இரட்டை சதம் எடுபடாமல் போய்விட்டது.

புனேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ரோகித் சர்மா 14 ரன்னில் வெளியேறிய நிலையில், மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் (108) அடித்தார். ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் (254) அடித்தார். இதனால் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.



ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ரோகித் சர்மா இரட்டை சதம் (212) அடிக்க, மயங்க் அகர்வால் 10 ரன்னில் வெளியேறினார். இதனால் ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஒட்டுமொத்தமாக மூன்று சதங்களுடன் 529 ரன்கள் குவித்த ரோகித் சர்மா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

இரண்டு சதங்களுடன் 340 ரன்கள் குவித்த மயங்க் அகர்வாலால் ஒரு ஆட்ட நாயகன் விருதைக்கூட பெற முடியாமல் ஏமாற்றமே அடைய முடிந்தது.
Tags:    

Similar News