பெங்களூரில் டிக்-டாக் வீடியோவால் ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலி
பெங்களூர்:
பெங்களூர் ஹெட்ஜ்நகரை சேர்ந்தவர்கள் அப்தாப்ஷெரீப் (19), முகமது மாடின் (23).
நேற்று மாலை இவர்கள் அதே பகுதியை சேர்ந்த தங்களது நண்பரான ஜபியுல்லாகானை சந்தித்து பேசினர். பின்னர் 3 பேரும் சேர்ந்து சன்ன சந்திரா மற்றும் யெலஹங்கா இடையேயான ரெயில்வே தண்டவாள பகுதியில் நின்று ‘டிக்-டாக்‘ வீடியோ எடுத்துள்ளனர்.
ஜபியுல்லா கான் தனது செல்போனில் வீடியோ எடுக்க மற்ற இருவரும ‘டிக்-டாக்‘ வீடியோவுக்காக நடித்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த பயணிகள் ரெயில் இவர்கள் 3 பேர் மீதும் மோதியது.
இதில் அப்தாப்ஷெரீப், முகமது மாடின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஜபியுல்லா கான் படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், சம்பவம் நடப்பதற்கு 30 நிமிடத்துக்கு முன்னர்தான் அவ்வழியாக ஒரு சரக்கு ரெயில் சென்றுள்ளது. அதன் பிறகு பயணிகள் ரெயில் வந்துள்ளது. அப்போது லோகோ பைலட் விசில் ஊதி உள்ளார். அதை வாலிபர்கள் கவனிக்காமல் டிக்-டாக்கில் மூழ்கி இருந்ததால் ரெயில் மோதி இறந்துள்ளனர் என்றனர்.