செய்திகள்
கொரோனா வைரஸ்

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

Published On 2020-10-24 06:00 GMT   |   Update On 2020-10-24 06:00 GMT
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஆண் ஒருவர் பலியானார். டாக்டர் உள்பட 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 22 ஆயிரத்து 796 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 3 பேர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பிற மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டனர். இதன் மூலம் 22 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 54 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து என்.எல்.சி. வந்த ஒருவர், விருத்தாசலம், பரங்கிப்பேட்டையை சேர்ந்த 2 கர்ப்பிணிகள், சிதம்பரத்தை சேர்ந்த டாக்டர், அரசு செவிலியருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 17 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 32 பேருக்கும் நோய் தொற்று உறுதியானது.

நேற்று முன்தினம் வரை 21 ஆயிரத்து 661 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 139 பேர் குணமடைந்து சென்றனர். இதுவரை 21 ஆயிரத்து 800 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை 264 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதன் விவரம் வருமாறு:-

நெய்வேலியை சேர்ந்த 49 வயது ஆண் ஒருவர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்று அறிகுறிகளுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதித்த 712 பேர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 70 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 759 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
Tags:    

Similar News