ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் பாரிவேட்டை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் பாரிவேட்டை வைபவம் கண்டருளினார்.
பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் நாட்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சிறப்பு புறப்பாடுகளும், வைபவங்களும் நடக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் சங்கராந்தி மண்டபம் சென்று வந்தார்.
நேற்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு காலை 6 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 6.45 மணிக்கு கனுமண்டபம் வந்தார். அங்கு அவருக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடந்தன.
பின்னர் மதியம் 1 மணியளவில் நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு பாரிவேட்டை நடத்தியபடி ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகிலுள்ள திருவந்திக்காப்பு மண்டபம் வரை உலா வந்து ரெங்க விலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் அசோக்குமார், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கவிதா ஆகியோர் தலைமையில் கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், கைங்கர்யபரர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.