செய்திகள்
குனியமுத்தூரில் சுகாதாரதுறை சூப்பர்வைசரிடம் ரூ.2 லட்சம் பணம் திருட்டு
கோவை குனியமுத்தூர் அருகே சுகாதாரதுறை சூப்பர்வைசரிடம் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள நரசிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56). பொது சுகாதாரதுறையில் சூப்பர் வைசராக உள்ளார்.
நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள வங்கிக்கு பணம் எடுப்பதற்காக சென்றார்.
வங்கியில் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை எடுத்து கண்ணன் தனது மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டு இருந்த பெட்டியில் பணத்தை வைத்தார்.
பின்னர் அந்த பகுதியில் உள்ள எலக்ட்ரீக்கல் கடைக்கு பொருட்கள் வாங்கி விட்டு வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பெட்டி திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 2 லட்சம் பணம் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து கண்ணன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.