விபத்துக்களை தடுக்க கோவையில் 22 இடங்களில் ‘யு டர்ன்’ செல்ல தடை
கோவை:
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துக்களும் அதிகரிக்கிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். விழிப்புணர்வும் நடத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து கோவை மாநகர் பகுதிக்கு உட்பட்ட மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அதிகம் நடைபெறும் இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி விபத்து தடுப்பதற்காக பல்வேறு பகுதிகளில் சென்டர் மீடியனில் இருந்து வாகனங்கள் திரும்புவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அவிநாசி ரோட்டில் பீளமேடு புதூர் சந்திப்பு, சத்தி ரோட்டில் டெக்ஸ்டூல் அம்மன் நகர், சிவசக்தி நகர், புரோஸோன் மால் அருகில், திருச்சி ரோட்டில் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி சந்திப்பு, ஜெய்சாந்தி சந்திப்பு, தியாகி சண்முகா நகர் அருகில், எல்.ஜி கம்பெனி, வி.ஜி. எம். ஆஸ்பத்திரி, கிருஷ்ணா காலனி, ஐயர் ஆஸ்பத்திரி.
தடாகம் ரோட்டில், வெங்கடசாமி ரோடு மேற்கு சந்திப்பு, திருமூர்த்தி லே அவுட், ஆரோக்கியசாமி ரோடு மேற்கு, மருதமலை ரோட்டில் பி.என்.புதூர் லட்சுமி விநாயகர் கோவில் அருகில், வள்ளலார் ஆஸ்பத்திரி முல்லை நகர் அருகில், உக்கடம் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில் சந்திப்பு ஆகிய 22 இடங்களில் யு டர்ன் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
விபத்துக்களை தடுக்க மாநகர போலீசாரால் செய்யப்பட்டுள்ள மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.