கேரளாவில் தேர்தல் நிதி தராத கம்யூ. தொண்டர் வீட்டு சுவர் இடிப்பு
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோடு அருகே காஞ்சான்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராசிக். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உள்ளூர் கமிட்டி உறுப்பினராக உள்ளார்.
இந்தநிலையில் நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலின் போது கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் தேர்தல் செலவுக்கு ராசிக்கிடம் நிதி கேட்டதாக தெரிகிறது. ஆனால் ராசிக் நிதி கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்தார். இந்த நிலையில் காஞ்சான்கோடு பகுதியில் புதிதாக அவர் கட்டி வந்த வீட்டின் சுவர் இடிக்கப்பட்டு அங்கு கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கம் அமைப்பின் கொடி ஏற்றப்பட்டிருந்தது.
இதுகுறித்து ராசிக் காசர் கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்திய போது அஞ்சானூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் சபேஸ் போலீசாரிடம் பஞ்சாயத்து அனுமதியின்றி வீடு கட்டி வருவதாக புகார் தெரிவித்தார்.
ஆனால் ராசிக் வீடு கட்ட பஞ்சாயத்தில் அனுமதி பெற்ற ஆவணங்களை போலீசாரிடம் காட்டினார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.