வழிபாடு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்

Published On 2022-02-28 06:41 GMT   |   Update On 2022-02-28 06:41 GMT
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் சிறப்பு நிகழ்ச்சியாக 4-ந்தேதி வலிய படுக்கை பூஜை நடக்கிறது. 8-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.

ஏனெனில் இக்கோவிலுக்கு குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். அதனாலேயே பெண்களின் சபரிமலை என்று கூறப்படுகிறது.

பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், 6 மணிக்கு பஞ்சாபிஷேகமும், 6.30 மணிக்கு உஷ பூஜையும், சிறப்பு செண்டை மேளம், தீபாராதனை நடந்தது. பின்னர் 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து திருக்கொடி மேள தாளத்துடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கொடி வெள்ளை துணியில் சிங்கவாகனம் பொறிக்கப்பட்டு பூமாலை, மணி போன்றவை கட்டப்பட்டு இருந்தது.

தொடர்ந்து கோவிலின் முன்புள்ள கொடிமரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கொடியேற்றம் நடந்தது. இந்த காட்சியை காண அங்கு கூடியிருந்த பெண் பக்தர்கள் குலவையிட்டனர். பிறகு தேங்காய், பழம், வெண்பொங்கல் வைத்து கொடிபூஜை, கற்பூரபூஜை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் மனோ தங்கராஜ், விஜயகுமார் எம்.பி., கலெக்டர் அரவிந்த், திருக்கோவில் நிர்வாக இணை செயலாளர் ஞானசேகர், கல்குளம் தாசில்தார் வினோத், சிறப்பு தாசில்தார் ரமேஷ், கோவில் தந்திரி சங்கர நாராயணன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ஆறுமுக நயினார், தி.மு.க. மீனவரணி மாவட்ட முன்னாள் அமைப்பாளர் பசலியான், இந்து முன்னணி கோட்ட செயலாளர் மிசா சோமன், ஒன்றிய துணைத்தலைவர் பிரதீப்குமார், சுவாமி பத்மேந்திரா, ஹைந்தவ சேவா சங்க தலைவர் கந்தப்பன், பொதுச்செயலாளர் ரெத்ன பாண்டியன், செயலாளர் முருகன், பொருளாளர் சசீதரன் மற்றும் நிர்வாகிகள், பெரிய சக்கர தீவெட்டிக்குழு தலைவர் முருகன், ஸ்ரீதேவி கலா மன்ற தலைவர் செல்லத்துரை, தேவி சேவா சங்க தலைவர் காளிப்பிள்ளை உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து சமய மாநாடு திடலில் இந்து சேவா சங்கம் சார்பில் 85-வது சமய மாநாடு கொடியினை தலைவர் கந்தப்பன் ஏற்றி வைத்தார். வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்த ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கேற்றி சிறப்புரை ஆற்றினார். இதில் கேரள முன்னாள் மந்திரி சிவகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கோவிலின் சிறப்பு நிகழ்ச்சியாக 4-ந்தேதி இரவு 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் வலிய படுக்கை பூஜை நடக்கிறது. 8-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் அம்மனுக்கு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் படைக்கப்படும். இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News