செய்திகள்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற வடிவேல் குடும்பத்தினரை படத்தில் காணலாம்.

தருமபுரியில் கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

Published On 2019-11-12 10:48 GMT   |   Update On 2019-11-12 10:48 GMT
தருமபுரியில் இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியை அடுத்துள்ள மோளையானூர் காளியம்மன் தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது37).

இவரது மனைவி நதியா (31). இவர்களுக்கு திருமலை என்ற மகனும், 13 வயது மதிக்கத்தக்க மகளும் உள்ளனர். கூலித்தொழிலாளியான வடிவேலும், அவரது மனைவி நதியாவும் கேரளா மாநிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.

இதனால் வடிவேல் தனது மகன், மகளையும் தனது தாய் வீட்டில் விட்டு சென்றுள்ளார். அங்கு அவரது பராமரிப்பில் இருவரும் பள்ளிக்கு சென்று வந்தனர். வடிவேலின் தம்பி ராணுவத்தில் பணியாற்றி வருபவருமான சுரேஷூம், அவரது மனைவி மணிமேகலையும் அதே பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வடிவேல் மகன் திருமலைக்கும், அவரது சித்தி மணிமேகலைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் ஒருவரைக்கொருவர் தாக்கி கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த திருமலை, மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து ஆத்திரம் தீராத மணிமேகலை நேற்று தனது தம்பிகள் 3 பேருடன் சேர்ந்து திருமலையை சரமாரியாக தாக்கியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடிவேல், நதியா ஆகிய 2 பேரும் கேரளாவில் இருந்து தருமபுரிக்கு வந்தனர். அப்போது அவர் நடந்த சம்பவம் குறித்து தனது மகன் திருமலையிடம் கேட்டறிந்தார்.

இது குறித்து வடிவேல் தனது மகன் திருமலையை தம்பி மனைவி மணிமேகலை மற்றும் அவரது தம்பிகள் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட வடிவேல் அவரது தாயார் கந்தா, மனைவி நதியா, மகன் திருமலை, மகள் ஆகிய 5 பேரும் இன்று காலை தருமபுரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு தருமபுரி-சேலம் செல்லும் சாலையில் வடிவேல் குடும்பத்துடன் நின்று திடீரென்று மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனை கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் ஓடிவந்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து வடிவேல் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் போலீசாரிடம் வடிவேல் கூறியதாவது:-

எனது மகன் திருமலையை தம்பி மனைவி மணிமேகலை என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நான் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் எனது மனைவி இருவரும் வெளிமாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வருவதால் எனது மகன், மகளுக்கு பாதுகாப்பு இல்லை.

இதனால் எனது மகனை எந்த நேரத்திலும் கொலை செய்யலாம். இதற்கு திருமலையை தாக்கிய மணிமேகலை மற்றும் அவரது தம்பிகள் உள்பட 4 பேரை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் தீக்குளிக்க முயன்ற 5 பேரையும் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன் றுகாலை கலெக்டர் அலுவலகம் முன்பு கூலி தொழிலாளி தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News