உள்ளூர் செய்திகள்
விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பானைகள்

செங்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு ஏற்றுமதியாகும் பானைகள்

Published On 2022-01-11 10:32 GMT   |   Update On 2022-01-11 10:32 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி செங்கோட்டையில் மண் பானை தயாரிப்பு சூடுபிடித்துள்ளது. அவை கேரளாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
செங்கோட்டை:

செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியான தேன்பொத்தை, கட்டளைகுடியிருப்பு, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு மண்பாண்ட தொழிலே பிரதான தொழிலாகும்.

இங்கு மண்ணினால் தயாரிக்கப்படும் அடுப்புவகைகள், மண்பானைகள், மண்சட்டிகள், பூந்தொட்டி வகைகள், அகல் விளக்குகள் போன்றவைகள் தயாரித்து உள்ளூர் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவிற்கும் விற்பனை செய்து வருகின்றனர். 

இவர்கள் மண் பானைகள், அடுப்புகள் செய்வதையே தொழிலாக செய்து குடும்பம் நடத்தியதோடு தங்கள் குழந்தைகளுக்கும் அதையே கற்று கொடுத்து வந்துள்ளனர்.

இத்தொழிலை நம்பி சுமார் 400 குடும்பங்கள் வரை இருந்த நிலையில், தற்போது நலிவடைந்து 50 குடும்பங்கள் மட்டுமே இத்தொழிலை செய்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

வாரத்திற்கு 1,000 பானைகள் வரை உற்பத்தி செய்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விற்பனை வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.தற்போது பொங்கல் சீசனை தொடர்ந்து பொங்கலுக்கான பானைகள், அடுப்பு, மண் சட்டி, பானை பொங்கல்கட்டி தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  

மண்பானைகள் செய்வதும், அவற்றை வியாபாரிகளிடம் விற்பதுமாக இரவும், பகல் பாராது உழைத்து வருகின்றனர். தமிழகத்தில் பெரும்பாலோர் பித்தளை, சில்வர் பாத்திரங்களிலேயே பொங்கல் வைக்கும் பழக்கத்திற்கு வந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டில் ரூ.40 முதல் ரூ.100 வரை பொருட்களை விற்றதாகவும், ஆள்பற்றாக்குறை, குளங்களில் மண் அள்ள தாலுகா அலுவலகங்களில் காத்திருப்பது, கடந்தாணடில் பெய்த தொடர்மழையால் செய்த பானைகளை பாதுகாக்க இடமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை காரணமாக இத்தொழிலில் பெரிய அளவில் வருமானமும் கிடைப்பது இல்லை என்கின்றனர்.

தற்போது அதிக அளவில் பொங்கல் பானைகள் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பானைகள் ரூ.70 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது. 

அடுப்பு ரூ.75 முதல் ரூ.160 வரையிலும், மண் சட்டிகள் ரூ.20 முதல் ரூ.60 வரையிலும் விற்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News