செய்திகள்
மாணவர் உதித் சூர்யாவை போலீசார் அழைத்து வந்த காட்சி

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்: மாணவர் உதித்சூர்யா-தந்தை காவல் நீட்டிப்பு

Published On 2019-10-10 10:06 GMT   |   Update On 2019-10-10 10:06 GMT
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடு செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மாணவர் உதித்சூர்யா, தந்தை வெங்கடேசன் காவலை 24ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தேனி:

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் மற்றும் அவரது மகன் உதித்சூர்யா (வயது 20) கடந்த மாதம் 26-ந்தேதி சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை தொடர்ந்து சென்னை மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை முகமது ‌ஷபி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்த மாணவர் இர்பான் கடந்த 1-ந்தேதி சேலம் 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது நீதிமன்ற காவல் முடிந்ததை தொடர்ந்து வழக்கு நடந்துவரும் தேனி மாவட்ட சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டனர். இதையடுத்து நேற்று பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு தேனி கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இர்பானை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இதனிடையே கைதான டாக்டர் வெங்கடேசன், முகமது ‌ஷபி ஆகியோர் ஜாமீன் கேட்டு தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் மாணவர் உதித்சூர்யாவுக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்காததை சுட்டிக்காட்டி டாக்டர் வெங்கடேசன், முகமது ‌ஷபி ஆகியோரது மனுக்களை தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ் ஆகியோரும் ஜாமீன் கேட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரது காவல் இன்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். இருவரையும் வருகிற 24-ந் தேதி வரை தொடர்ந்து காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து உதித் சூர்யா, அவருடைய தந்தை வெங்கடேசன் ஆகிய இருவரும் மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Tags:    

Similar News