செய்திகள்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீது மக்களவையில் விவாதம் - காங்கிரஸ் வெளிநடப்பு

Published On 2019-01-08 11:32 GMT   |   Update On 2019-01-08 11:32 GMT
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தானில் வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். #CitizenshipBill
புதுடெல்லி:

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வாழ்ந்துவரும் முஸ்லிமல்லாத பிற மதங்களை சேர்ந்த மக்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவை அறிமுகம் செய்துவைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் மேற்கண்ட நாடுகளில் சிறுபான்மையினத்தவர்களாக இருந்து, இந்தியாவுக்கு வந்து வாழ விரும்பும் இந்து, ஜைன, கிறிஸ்தவ, புத்த, பார்சி மதத்தினர் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார்.

ஆனால், காங்கிரஸ் உள்பட சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்த மசோதாவுக்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இதை பாராளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக் கொள்ளாததால் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த அசாம் கன பரிஷத் கட்சி மத்திய அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அம்மாநில அரசுக்கு அளித்துவந்த ஆதரவை நேற்று விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதை சுட்டிக்காட்டி இன்று மக்களவையில் சில உறுப்பினர்கள் பேசியபோது, ‘வெளிநாடுகளில் இருந்துவரும் குடியேறிகளின் மொத்த சுமையையும் அசாம் மாநிலம் தனியாக தாங்கப் போவதில்லை. அனைத்து மாநிலங்களும் அதை பகிர்ந்துக்கொள்ளப் போகிறது’ என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.  #CitizenshipBill #CitizenshipBillAmendment #Billintroduced #LokSabha 
Tags:    

Similar News