காயல்பட்டினத்தில் பா.ஜனதா பிரமுகர் கடை சூறை- கும்பல் மீது வழக்கு
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வாணியகுடி தெருவை சேர்ந்தவர் பண்டாரம் (வயது 55).
சைக்கிள் கடை நடத்தி வரும் இவர் நகர பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் காயல்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் வாடகைக்கு கடை எடுத்து நடத்தி வந்துள்ளார்.
இந்த கடையை காலி செய்வது தொடர்பாக இவருக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் இடையே கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பண்டாரம் ஆறுமுகநேரி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், தனது கடையை ஒரு கும்பல் சூறையாடி அங்கிருந்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்று விட்டதாக கூறியிருந்தார்.
அந்த புகாரில் வண்ணார்குடி தெருவை சேர்ந்த சிவனைந்த பெருமாள் (49), பூந்தோட்டம் இசக்கிமுத்து (65), விசாலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவன் (65) உள்ளிட்ட சிலர் மீது குற்றம் சுமத்தி இருந்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபா குமார் வழக்குப்பதிவு செய்தார்.
இன்ஸ்பெக்டர் செந்தில், திருச்செந்தூர் உதவி சூப்பிரண்டு ஹர்சிங் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.