செய்திகள்
அமைச்சர் பெரியாசமி, தக்காளி

கூட்டுறவுத்துறை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை: அமைச்சர் ஐ.பெரியசாமி

Published On 2021-11-23 15:11 GMT   |   Update On 2021-11-23 15:11 GMT
கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ ரூ. 85 முதல் ரூ. 100 வரை குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து, விலை உயர்ந்து வருவதால் அனைத்து காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தினசரி தேவைக்கான காய்கறிகள் வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக டி.யு.சி.எஸ்., சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 2 இரண்டு  நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் உட்பட 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து காய்கறிகளும் (குறிப்பாக தக்காளி) விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மூலம் குறிப்பாக வெளிச்சந்தையில் தற்போது ரூ. 110 முதல் ரூ. 130 வரை விற்கப்பட்டு வரும் தக்காளி, கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ ரூ. 85 முதல் ரூ. 100 வரை குறைவான விலையில் தரமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் தக்காளி கொள்முதல் செய்யவும், இதனை படிப்படியாக உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாண்டு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் 5290 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் ஐ. பெரியசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News