செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலைக்கு செல்ல முயன்ற மேலும் 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்

Published On 2019-11-19 03:15 GMT   |   Update On 2019-11-19 03:15 GMT
சபரிமலைக்கு செல்ல முயன்ற மேலும் 2 பெண்களை நிலக்கல்லில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலை:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த பூஜை காலங்களில் சபரிமலை கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை என்றும், இதை மீறி வரும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது என்றும் கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். எனினும் சபரிமலை பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இளம்பெண்கள் வருகிறார்களா என்பதை கண்காணிக்க தேவசம்போர்டு ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



இதற்கிடையே நடை திறக்கப்பட்ட முதல் நாளில் சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து வந்த 10 இளம்பெண்களை பம்பையில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இந்தநிலையில் நிலக்கல் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து ஒரு குழுவினர் வந்த பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த பஸ்சில் இருந்த இரண்டு பெண்கள் 50 வயதுக்கும் குறைவானவர்கள் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.

எனவே, அவர்களின் ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் தனலட்சுமி என்ற பெண் 30 வயதுடையவர் என்பதும், லட்சுமி பார்வதி என்பவர் 40 வயது உடையவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இரண்டு பெண்களையும் போலீசார் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தினர். சபரிமலைக்கு செல்ல முயன்ற மேலும் 2 பெண்கள் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News