உள்ளூர் செய்திகள்
யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் நெசவாளர் காலனியைச் சேர்ந்த ராஜ்குமார்-லீலாவதி தம்பதியின் மகன் டால்வின்ராஜ். 11ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்து யோகா பயிற்சியில் ஆர்வம் கொண்டிருந்த இவர், குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு, அப்துல்கலாம் வேர்ல்டு ரெக்கார்டு, டிரம்ப் வேர்ல்டு ரெக்கார்டு மற்றும் மாவட்ட அளவில் 37 சாதனைகளும், தமிழ்நாடு அளவில் 17சாதனைகளும் படைத்துள்ளார்.
இவர் கடந்த 11ந்தேதி கோவாவில் நடந்த அகில இந்திய அளவிலான யோகாபோட்டியில் வெற்றி பெற்று 2வது பரிசை பெற்றார். இதன்மூலம் அடுத்த மாதம் நேபாள நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொள் ளவும் தேர்வாகி யுள்ளார். கோவாவில் நடந்த யோகாபோட்டியில் வெற்றி பெற்று தனது சொந்த கிராமத்திற்கு திரும்பிய பள்ளி மாணவரை கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்தும், வெடிகளை வெடித்தும் சிலம்பம் சுற்றியும் சிறப்பான வரவேற்பு அளித்து வீதிகளில் வலம் வந்தனர்.
அகில இந்திய யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் கூறும்போது, நேபாளம் நாட்டில் நடை பெற உள்ள யோகா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தமிழ் நாட்டிற்கும், இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதே எனது லட்சியம் என்றார்.