உள்ளூர் செய்திகள்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது
கிருஷ்ணகிரியில் வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் கடந்த 2-ந் தேதி கிருஷ்ணகிரி-வேப்பனபள்ளி சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியாக மொபட்டில் மூட்டையுடன் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த மூட்டையில் 100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மொபட்டுடன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வேப்பனபள்ளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சேகர்(வயது50) என்பதும், வேப்பனபள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து அதே பகுதியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் ஒரு டன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.