செய்திகள்
தற்கொலை

மதுரையில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-10-08 08:04 GMT   |   Update On 2021-10-08 08:04 GMT
மதுரையில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை விளாங்குடி வருமான வரி காலனி முதல் தெருவைச் சேர்ந்தவர் அக்னல் டயாஸ். இவர் அந்தமானில் உள்ள கப்பல் நிறுவனம் ஒன்றில் தலைமை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகள் பிரான்சிடா சைனி (வயது 17). பழைய குயவர் பாளையத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தார்.

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்த பிரான்சிடா சைனி கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு சென்று வந்தார். ஆனால் அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அவர் பள்ளிக்கு செல்லவில்லை. வீட்டில் தான் இருந்துள்ளார்.

அறைக்குள் இருந்த பிரான்சிடா சைனி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அறை கதவை தட்டி பார்த்தனர். ஆனால் பிரான்சிடா சைனி எந்த சத்தமும் கொடுக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது அறைக்குள் பிரான்சிடா சைனி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து கூடல் புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

தூக்கில் பிணமாக தொங்கிய பிரான்சிடா சைனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

பிரான்சிடா சைனி தற்கொலை செய்த அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று போலீசார் கையில் சிக்கியது.

அதில், “உங்களிடம் சொல்லாமல் பிரிந்து செல்வது வேதனை தருகிறது. நான் அம்மாவை மிகவும் நேசிக்கிறேன்’” என்கிற ரீதியில் பிரான்சிடா சைனி எழுதியிருந்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மாணவி பிரான்சிடா சைனி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இது தொடர்பாக கூடல்புதூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News