வழிபாடு
எருமேலி பெருவழிப்பாதை வழியாக ஐயப்ப பக்தர்கள் சென்ற போது எடுத்த படம்.

சபரிமலையில் 2 ஆண்டுக்கு பிறகு பெருவழிப்பாதை திறப்பு

Published On 2022-01-01 06:58 GMT   |   Update On 2022-01-01 06:58 GMT
ஆண்டுக்கு பின்னர் நேற்று முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 35 கி.மீ. தூரமுள்ள இந்த வனப்பாதையில் 12 இடங்களில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் 41 நாட்கள் நடந்த வழக்கமான பூஜைகளுக்கு பிறகு கடந்த 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டது.

மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அன்றைய தினம் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணி முதல் 11 மணி வரை ஏராளமான பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

சபரிமலை தரிசனத்திற்கு தற்போது ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 60 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசன அனுமதி வழங்கப்படுவதால் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாண்டு தரிசனத்திற்காக வந்தனர்.

மேலும் 2 ஆண்டுக்கு பின்னர் நேற்று முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 35 கி.மீ. தூரமுள்ள இந்த வனப்பாதையில் 12 இடங்களில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதை தொடர்ந்து தரிசன நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுவரை இரவு 10 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று (சனிக்கிழமை) முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News