செய்திகள்
கோப்புபடம்

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது - பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு

Published On 2021-08-04 10:40 GMT   |   Update On 2021-08-04 10:40 GMT
சிறுமியை திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்:

கரூர் மாவட்டம், நொச்சிபட்டியைச் சேர்ந்த தர்மராஜிக்கும்(வயது 27), 13 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளதாக அரவக்குறிச்சி வட்டார நல அலுவலர் கல்யாணிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ராதேவி விசாரணை நடத்தினார்.

விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலில் உள்ள முருகன் கோவிலில் தர்மராஜிக்கும், சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது உறுதியானது. அதன்பேரில், குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின்கீழ் தர்மராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த தர்மராஜின் தந்தை துரைசாமி மற்றும் தாய் அருக்காணி மற்றும் சிறுமியின் தந்தை மாரியப்பன், தாய் ராஜாத்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாமரத்து பண்ணைக்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் யோகேஸ்வரன் (27). இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய சமூக நல அலுவலர் மாலதிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் யோகேஸ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News