செய்திகள்
அமரீந்தர் சிங்

அமரீந்தர்சிங் தனது கருத்துகளை மறுபரிசீலனை செய்வார் - காங்கிரஸ் கட்சி நம்பிக்கை

Published On 2021-09-24 20:56 GMT   |   Update On 2021-09-24 20:56 GMT
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா பற்றிய கருத்துகளை அமரீந்தர் சிங் மறுபரிசீலனை செய்வார் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

பஞ்சாப் மாநில முதல் மந்திரி பதவியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் அனுபவமற்றவர்கள். அவர்களை தவறாக வழிநடத்துகின்றனர் என கூறியிருந்தார். 

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத், அமரீந்தர் சிங் எங்களை விட மூத்தவர். வயதானவர்கள் அடிக்கடி கோபத்தில் எவ்வளவோ பேசுவார்கள். அவரது கோபம், வயது, அனுபவம் ஆகியவற்றை மதிக்கிறோம். அந்த வார்த்தைகள், அவரது அந்தஸ்துக்கு அழகல்ல. அவர் தனது வார்த்தைகளை மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம். அரசியலில் கோபம், பொறாமை, விரோதம், பழிவாங்குதல், தனிப்பட்ட தாக்குதல் ஆகியவற்றுக்கு இடமில்லை. அவர் இன்னும் காங்கிரஸ் தலைவர்தான். அவர் கட்சியை விட்டு விலகுவதாக இருந்தால், அதுபற்றி நான் சொல்ல எதுவும் இல்லை என தெரிவித்தார். 

Tags:    

Similar News