செய்திகள்
தேசிய பத்திரிகை தினம்: ஊடக ஊழியர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து
தேசிய பத்திரிகை தினத்தையொட்டி அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர் 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகை தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய பத்திரிகை தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:-
தேசிய பத்திரிகை தினமான இன்று அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும், மக்களுக்கு தகவல் அளிப்பதிலும், அதிகாரம் அளிப்பதிலும் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொற்றுநோய்களின்போது மக்களுக்கு தொடர்ந்து தகவல் கொடுத்ததற்காக ஊடகவியலாளர்களை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.