செய்திகள்
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய தேர்வு-மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
வரும் 25-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வாயிலாக ‘கிஷார் வாக்யானிக் புரோட்சகான் யோஜனா’ எனும் தேசிய அளவிலான தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை அடிப்படையாகக்கொண்டு விண்ணப்பதாரர்களுக்கு பி.எச்.டி., வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அறிவியல் மற்றும் கணிதத்தின் கட்டாய பாடங்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2021-22ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பில் அறிவியல் பிரிவு சேர உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 10-ம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் நடப்பு கல்வியாண்டில் அறிவியல் பிரிவில் பயிலும் மற்றும் தேர்ச்சி பெற்ற பிளஸ்-2 மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
அதன்படி விண்ணப்பதாரர்கள் http://www.kvpy.iisc.ernet.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதில் தங்களின் கல்வி விவரங்கள், புகைப்படம், கையப்பம் மற்றும் பிற சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு கிரெடிட் கார்டு, ஏ.டி.எம்., டெபிட் கார்டு அல்லது நெட்பேங்கிங் சேவை ஆகியவற்றை பயன்படுத்தி கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தேர்வு நவம்பர் 7-ந்தேதி ஆன்லைனில் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது. வரும் 25-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.