வழிபாடு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கற்பூரம் ஏற்றவும், மலை மீது ஏறுவதற்கும் தடை

Published On 2022-04-15 08:02 GMT   |   Update On 2022-04-15 08:02 GMT
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றுவதற்கும், மலை மீது ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்  வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி விஷேச நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

இதில் சித்ரா பவுர்ணமி மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது.

விடுமுறை தினத்தில் சித்ரா பவுர்ணமி வருவதால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று 3 ஆயிரத்து 242 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை நகரை சுற்றி 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 37 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 15 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அருணாசலேவரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் வயது முதிர்ந்த பக்தர்களை அழைத்து செல்ல 3 பேட்டரி கார்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கிரிவலம் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 39 இருசக்கர வாகன பேட்ரோல் போலீசார் கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். மருத்துவ உதவிக்காக இரு சக்கர வாகன ஆம்புலன்சு வாகனமும் ரோந்து பணியில் இருக்கும்.

திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றுவதற்கும், மலை மீது ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 சாலைகளின் முகப்பு பகுதிகளில் வேளாண்துறை சார்பில் 42 விவசாய பம்பு செட்டுகளில் பக்தர்கள் குளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தனிநபர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் சார்பில் கிரிவல பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய 40 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகரைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களில் அன்னதானம் செய்ய விரும்பபுவர்களுக்கு உரிய அனுமதியும், இடமும் அளிக்கப்படும்.

தற்காலிக பஸ் நிலையம் மற்றும் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் முக்கிய பகுதிகளுக்கு செல்ல இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து கிரிவலப்பாதை மற்றும் நகருக்குள் உள்ள பகுதிகளுக்கு வர தனிநபர் ஆட்டோ கட்டணமாக ரூ.30 முதல் ரூ.50 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிரிவலத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைத்து அரசு துறைகளின் சார்பில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பயன்படுத்தி பாதுகாப்புடன் கிரிவலம் சென்று வரலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News