செய்திகள்
சேதமாகும் வாழைகளுக்கு காப்பீடு கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
தோட்டக்கலை துறை சார்பில் சேதமடையும் வாழைக்கு பயிர்க்காப்பீடு வழங்கும் திட்டம் நடைமுறையில் இருப்பினும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.
அவிநாசி:
அவிநாசி, சேவூர் அருகேயுள்ள அசநல்லிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சூறைக்காற்றில் 7,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து வாழை பயரிட்ட விவசாயிகள் கூறியதாவது:
தோட்டக்கலை துறை சார்பில் சேதமடையும் வாழைக்கு பயிர்க்காப்பீடு வழங்கும் திட்டம் நடை முறையில் இருப்பினும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. ஒரு ஏக்கரில் வாழை பயிரிட ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவாகிறது. பயிர்க்காப்பீடு இல்லாததால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் சூறாவளி காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் வாழை சேதமானால் அப்பகுதி முழுவதும் உள்ள வாழை தோட்டங்கள் பாதிப்பை எதிர்கொண்டால் மட்டும் தான் காப்பீடு அனுமதிக்கப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்ற சேதமடையும் வாழைக்கு பயிர்க்காப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.