உள்ளூர் செய்திகள்
சேலத்தில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் ஜெயிலில் அடைப்பு
சேலத்தில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி அடுத்த ஜோடுகுளி பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 39).
இவர் சேலம் டவுனில் இருந்து ஓமலூர் செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பணியில் இருந்தபோது பஸ் ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
மாமாங்கம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது பஸ்சுக்குள் இருந்த ஒரு வாலிபர், சக பயணியை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் கண்டக்டர் கணபதி, அந்த வாலிபரை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், கணபதியை சரமாரியாக தாக்கினார்.
இதுகுறித்து கணபதி, சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் மாமாங்கம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது (27) என்பது தெரியவந்தது. போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.