இந்தியா
கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போதை விருந்து நடத்திய பெண் உள்பட 5 பேர் கைது
கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போலீசாரை கண்டதும் 8-வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் புத்தாண்டு தினத்தை கொண்டாட சிலர் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கொச்சியை அடுத்த திருக்காக்கரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு வாலிபர்கள் சிலர் கூடியிருந்தனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியில் போதை விருந்து நடப்பது தெரிய வந்தது. போலீசார் அந்த குடியிருப்புக்குள் அதிரடியாக நுழைந்தனர்.
அங்கு பெண் உள்பட வாலிபர்கள் பலர் போதையில் இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்கள் காயங்குளத்தை சேர்ந்த அதுல், கோழிக்கோட்டை சேர்ந்த ஷினோ மெர்வின் மற்றும் கொல்லத்தை சேர்ந்த நஜிம் ஷம்சுதீன், அனீஸ் அனி என தெரியவந்தது. இவர்களுடன் பெண் ஒருவரும் இருந்தார். 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை பொருள்களையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.
போதை விருந்து நடந்த 8-வது மாடிக்கு போலீசார் சென்றதும் அங்கிருந்த வாலிபர் ஒருவர் பால்கனி பகுதிக்கு ஓடினார். அவர் போலீசாரிடம் சிக்காமல் இருக்க 8-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
அவர் விழுந்த பகுதியில் கார் ஷெட்டுக்காக அலுமினிய கூரை அமைக்கப்பட்டிருந்தது. அதன்மேல் விழுந்ததால் அந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக படுகாயங்களுடன் உயிர் தப்பினார். போலீசார் அந்த வாலிபரை மீட்டு காக்கநாட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.