செய்திகள்
மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல்: உடல்நிலையில் முன்னேற்றம் - எய்ம்ஸ் தகவல்

Published On 2021-10-16 12:52 GMT   |   Update On 2021-10-16 14:04 GMT
மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது, அவர் அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டார் என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னை:

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (89)காய்ச்சல் மற்றும் உடல்சோர்வு காரணமாக கடந்த 13-ம் தேதி மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடலில் ரத்தத் தட்டுக்கள் மெல்ல அதிகரித்து வருவதாகவும், அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங்குக்கு கடந்த திங்கள்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட அவா், உடல் சோர்வாக இருப்பதாக தெரிவித்தார். அதைத் தொடா்ந்து 16-ம் தேதி மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அது தொடா்பான பரிசோதனையும் அவருக்கு நிபுணா்களால் மேற்கொள்ளப்பட்டது. இப்போது, அவரது உடல்நிலை சீராகவும், முன்பை விட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, மருத்துவமனைக்குச் சென்று மன்மோகன் சிங் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

கடந்த ஏப்ரலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மன்மோகன் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News