செய்திகள்
கோப்புபடம்

பாசன நீரை சேமிக்க விவசாயிகளுக்கு கைகொடுக்கும் பண்ணைக்குட்டைகள்

Published On 2021-07-16 11:16 GMT   |   Update On 2021-07-16 11:16 GMT
விவசாய நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு அரசு பல வழிகளில் உதவி வருகிறது.
மடத்துக்குளம்:

விவசாய நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு அரசு பல வழிகளில் உதவி வருகிறது.விவசாயத்திற்கு தண்ணீர்த் தட்டுப்பாடு என்பது தொடர்கதையாக உள்ளது. அந்தவகையில் விளைநிலங்களில் அமைக்கப்படும் பண்ணைக்குட்டைகள் நீர் சேமிப்புக்கு மிகவும் கைகொடுத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மடத்துக்குளத்தை அடுத்த வேடபட்டியைச் சேர்ந்த ஒரு விவசாயி  ஒருவர் கூறியதாவது:- 

விவசாய நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு அரசு பல வழிகளில் உதவி வருகிறது. அந்தவகையில் வேளாண் பொறியியல் துறை மூலம் மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்கலாம். மேலும் தோட்டக்கலைத்துறை மூலம் விளைநிலங்களில் நீர் சேமிப்புக்குட்டைகள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதுதவிர நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள் மூலமும் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படுகிறது. 100 நாள் வேலைத்திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பாசன வசதிகளை உருவாக்குதல், நில மேம்பாடு, தோட்டக்கலை தோட்டம் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

 இதில் பாசன வசதிகளை உருவாக்குதல் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் பண்ணைக் குட்டைகள் அமைத்துக் கொடுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த திட்டத்தின் கீழ் எங்கள் தோட்டத்தில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டது. அது இன்றளவும் கைகொடுத்து வருகிறது. விளை நிலத்தின் தாழ்வான பகுதியில் இந்த பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளதால் விளைநிலத்தில் விழும் மழைநீர் வீணாகாமல் இந்த பண்ணைக்குட்டையில் சேமிக்கப்படுகிறது.  

இதுதவிர வீட்டுக்கூரை  மற்றும் சுற்றுப்புறத்தில் விழும் மழைநீரும் வீணாகாமல் இந்த பண்ணைக்குட்டையில் சென்று சேருமாறு வடிகால் அமைத்துள்ளோம். இதனால் குறைந்த அளவில் மழை பெய்தாலும் பண்ணைக்குட்டைக்கு நீர் கிடைக்கிறது. இது தவிர கால்வாய் பாசன நீர் கிடைக்கும் போது அத்தனையும் இந்த பண்ணைக்குட்டையில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். 

மேலும் ஆழ்துளைக்கிணறு அல்லது திறந்தநிலைக் கிணறுகளுக்கு அருகில் இத்தகைய பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படும் போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து அதிக அளவில் பாசன நீர் பெறுவதற்கு பண்ணைக்குட்டைகள் கைகொடுக்கிறது. அனைத்து விவசாயிகளும் விளை நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல், வீடுகளில் மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளை உருவாக்குதல், நீர் நிலைகளைப் பாதுகாத்தல், நீர் நிலை மேம்பாட்டுத் திட்டங்களில் உறுதுணையாக இருத்தல் போன்றவற்றில் அக்கறை காட்டினால் வருங்காலத்தில் பாசன நீர் பற்றாக்குறை என்பது ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News