செய்திகள்
கொலை

திருவள்ளூர் அருகே தந்தையை உருட்டுக்கட்டையால் அடித்து கொன்ற மகன்

Published On 2021-11-22 13:46 GMT   |   Update On 2021-11-22 13:46 GMT
திருவள்ளூர் அருகே தந்தையை மகன் உருட்டு கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கன்னியம்மா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (51). கூலித்தொழிலாளி.

இவரது மனைவி மகேஸ்வரி. மகன் பாண்டியன் (28). பாண்டியன் மனநிலை பாதிக்கப்பட்டவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகனை பெற்றோர்கள் பல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றும் அவர் குணமாக வில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டியன் தாய் மகேஸ்வரியை தாக்கி உள்ளார். இதனால் திருநின்றவூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் மகேஸ்வரி வசித்து வருகிறார்.

மேலும் பாலகிருஷ்ணன் தனது மகனை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் பாலகிருஷ்ணன் அவரது மகன் பாண்டியன் ஆகியோர் இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டது. அப்போது பாண்டியன் தனது தந்தை பாலகிருஷ்ணன் இடம் மெழுகுவர்த்தியை கொண்டு வருமாறு கூறியுள்ளார். பாலகிருஷ்ணன் மெழுகுவர்த்தியை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது தந்தை மகனுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியன் வீட்டில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து தந்தை பாலகிருஷ்ணனை தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து மணவாளநகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், மணவாள நகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் அருகே தந்தையை மகன் உருட்டு கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News