செய்திகள்
விழுப்புரத்தில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
வேலை பார்த்த இடத்தில் பணியிட மாறுதல் வழங்கப்பட்டதால் மனமுடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்:
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜான்சன் மகன் கிறிஸ்டியன்பிரபு (வயது 28). இவர் டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே நிறுவனத்தின் கிளையான விழுப்புரத்தில் உள்ள அலுவலகத்தில் பணியாற்ற கிறிஸ்டியன்பிரபுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் விழுப்புரத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தபடி, கிளை நிறுவனத்தில் பணியாற்றினார். ஆனால் பணி மாறுதல் காரணமாக அவர் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் விழுப்புரம் வழுதரெட்டியில் தான் தங்கியிருந்த வாடகை வீட்டில் கிறிஸ்டியன்பிரபு, மின்விசிறியில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.