தொழில்நுட்பம்
இரண்டாவது முறை விலை உயர்த்தப்பட்ட ரெட்மி ஸ்மார்ட்போன்
சியோமியின் ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டது.
ரெட்மி பிராண்டு இந்திய சந்தையில் புதிய ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் ரூ. 14999 எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்தது. பின் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக இதன் விலையை ரூ. 1500 உயர்த்துவதாக ரெட்மி அறிவித்தது.
அந்த வகையில் முந்தைய விலை உயர்வின்படி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ. 16499 எனும் துவக்க விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டது.
இம்முறை இதன் 6 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல்களின் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் விலை முறையே ரூ. 16999 மற்றும் ரூ. 18499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 19999 விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் சேல் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் அடுத்த விற்பனை ஜூன் 24 ஆம் தேதி துவங்குகிறது.
முன்னதாக ரெட்மி நோட் 8, ரெட்மி 8ஏ டூயல் மற்றும் ரெட்மி 8 போன்ற ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டது. சமீபத்திய விலை உயர்வுக்கான காரணம் தொடர்பாக சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.