செய்திகள்
சசிகலா

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா: பாதுகாப்பு கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் மனு

Published On 2021-10-14 08:59 GMT   |   Update On 2021-10-14 08:59 GMT
அதிமுகவின் தென்சென்னை மாவட்ட முன்னாள் இணை செயலாளர் வைத்தியநாதன் அளித்துள்ள மனுவில், சசிகலாவை ‘அதிமுக பொதுச்செயலாளர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த வசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்து, பின்னர் அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கினார். ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு சசிகலாவிடம் மன மாற்றம் ஏற்பட்டது. அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தொலைபேசியில் தொடர்ந்து பேசிய சசிகலா ‘விரைவில் உங்களை எல்லாம் சந்திப்பேன்’ என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை திரட்ட உள்ளதாக தகவல் வெளியானது. 

இந்தநிலையில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 16-ந் தேதியன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த முடிவு செய்துள்ளார்.  மறுநாள் 17-ந் தேதியன்று தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார்.



அக்டோபர் 16ல் ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் அண்ணா நினைவிடம் செல்வதால் சசிகலாவுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அக்டோபர் 17ல் எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்குச் செல்ல உள்ளதால், பாதுகாப்பு கேட்டு தனியாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் தென்சென்னை மாவட்ட முன்னாள் இணை செயலாளர் வைத்தியநாதன் அளித்துள்ள அந்த மனுவில், சசிகலாவை ‘அதிமுக பொதுச்செயலாளர்’ என்றே குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா சமாதிகளுக்கு சென்று மாலை அணிவிக்கும் சசிகலா அதன் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News