செய்திகள்
திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்:
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபடும் துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.
இதில் மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், பழனிவேல், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். சட்டவிரோதமாக செயல்படும் துணைவேந்தர் சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.