செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 529 கன அடியாக சரிவு

Published On 2021-09-12 05:13 GMT   |   Update On 2021-09-12 05:13 GMT
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.
மேட்டூர்:

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10 ஆயிரத்து 819 கன அடி தண்ணீரும், கபினியில் இருந்து 1950 கன அடி தண்ணீரும் என மொத்தம் 12 ஆயிரத்து 950 கன அடி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீருடன், மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு இன்று 10 ஆயிரத்து 529 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் நேற்று முன்தினம் வரை 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை முதல் இதன் அளவு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாயில் 650 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணை நீர்மட்டம் நேற்று 76.18 அடியாக இருந்தது. தண்ணீர் திறப்பு அதிகமானதால் இன்று மேட்டூர் அணை நீர்மட்டம் 74.09 அடியாக குறைந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்பு உள்ளது. அதே வேளையில் மழை அதிகரித்து நீர்வரத்து கூடுதலாகும் பட்சத்தில் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News