செய்திகள்
நிர்வாகிகள் மத்தியில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசிய போது எடுத்த படம்.

த.மா.கா. தனி சின்னத்தில் போட்டி- ஜிகே வாசன் பேட்டி

Published On 2021-01-08 19:47 GMT   |   Update On 2021-01-08 19:47 GMT
வருகிற சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. தனி சின்னத்தில் போட்டியிடும். அ.தி.மு.க. கூட்டணியில் சின்னம் பிரச்சினை கிடையாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
சென்னை:

சட்டமன்ற தேர்தல் குறித்து சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த த.மா.கா. மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை அடையாறில் உள்ள ராஜரத்தினம் கலையரங்கில் நேற்று நடந்தது.

தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் வரவேற்றார். கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து மாவட்ட தலைவர்களிடம் கருத்து கேட்டார்.

வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பிஜு சாக்கோ, தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் சைதை மனோகரன் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதன்பின்பு, வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற த.மா.கா.வினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.

கூட்ட முடிவில் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. தனி சின்னத்தில் போட்டியிடும். சின்னம் பிரச்சினை அ.தி.மு.க. கூட்டணியில் கிடையாது. எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதை அதிகாரபூர்வமாக சரியான நேரத்தில் அறிவிப்போம்.

அ.தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை த.மா.கா. ஆதரிக்கிறது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளும் அதனை உறுதிப்படுத்துவார்கள் என்று நம்புகிறோம். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ரஜினிகாந்த் தேர்தல் களத்தில் இறங்கவில்லை. இருப்பினும் ரஜினிகாந்த் நல்லவர்களுக்கு ஆதரவு கொடுப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News