செய்திகள்
கோப்புபடம்

செல்போன்களால் தடம் மாறும் பெண்கள்: விருதுநகரில் ஒரே மாதத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் மாயம்

Published On 2021-08-24 10:54 GMT   |   Update On 2021-08-24 10:54 GMT
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பிளஸ்-2 மற்றும் கல்லூரி படிக்கும் மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர்:

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் வீட்டில் இருந்தே செல்போன் மூலம் ஆன்லைனில் படித்து வருகின்றனர்.

இதற்காக பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு புதிய செல்போன்களை வாங்கிக் கொடுக்கின்றனர். ஆன்லைன் பாடங்களுக்கு மட்டும் செல்போனை பயன்படுத்தும் மாணவிகள் மற்ற நேரங்களில் பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

இதனை பயன்படுத்தி சில ஆசாமிகள் மாணவிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி பழக்கம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்த பழக்கம் நாளடைவில் வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு மாணவிகளை ஆளாக்குகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பிளஸ்-2 மற்றும் கல்லூரி படிக்கும் மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கடந்த வாரம் விருதுநகரில் காணாமல் போனவர்களுக்கான முகாமை மாவட்ட போலீசார் நடத்தினர். இதில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அன்றைய தினம் 3 மாணவிகள் மீட்கப்பட்டனர்.

படிக்கின்ற வயதில் மாணவிகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுவதால் இது போன்று அவர்கள் தடம் மாறி செல்லும் சூழல் ஏற்படுகிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்காமல் வீடு, வேலை என்று செல்வதால் தான் அவர்களை கண்காணிக்க முடிவதில்லை.

எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News