ஐ.டி.சோதனையால் தேர்தல் வெற்றியை தடுக்க முடியாது - தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டனம்
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை-மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டித்துள்ளன.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கடைசி ஆயுதமாக வருமான வரித்துறையை பா.ஜனதா பயன்படுத்துகிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் அண்ணாநகர் தி.மு.க. வேட்பாளர் மோகன் உள்பட பலரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இதன் மூலம் தி.மு.க.வை முடக்கி விடலாம் என்று பா.ஜனதா பகல் கனவு காண்கிறது.
இத்தகைய அடக்கு முறையை எதிர்கொள்கிற பேராண்மை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு இருக்கிறது என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை. இந்த சோதனையை வன்மையாக கண்டிக்கிறேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-
ப.ஜனதா கூட்டணிக்கு தோல்வி பயம் வந்துள்ளதால் திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனையை நடத்தி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-
இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. தோல்வி பயத்தால் மற்ற கட்சிகளை அதிகார பலம் கொண்டு அடக்க பார்க்கிறது. ஆனால் மக்கள் தேர்தல் மூலம் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறும்போது, ஐ.டி. சோதனை பா.ஜனதா அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை. இதனால் மதசார்பற்ற கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது என்றார்.