செய்திகள்
திருப்பூரில் மேலும் ஒரு அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா
3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
திருப்பூர்:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த 1-ந்தேதி முதல் 9, 10, 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
அரசு வெளியிட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டுதலின் படி பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டன. மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வருதல், சானிடைசர் கொண்டு கையை சுத்தமாக கழுவுதல், உடல் வெப்ப பரிசோதனை செய்தல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிதல் போன்றவற்றை பின்பற்றியே மாணவர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் 18 வயது மேற்பட்ட மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெசவாளர் காலனியில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 29 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தொடர்ந்து பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.
மேலும் பள்ளியில் உள்ள மாணவ - மாணவிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தநிலையில் திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைபள்ளியை சேர்ந்த ஆண் ஆங்கில ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
பின்னர் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், பணியாளர்கள் என மொத்தம் 64 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.