ஆன்மிகம்
நாகூர் தர்கா 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது
கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்கா 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
நாகையை அடுத்த நாகூரில் உலக பிரசித்திப் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு வெளி மாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு ஊர்வலம் வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் சாகிபு மினராவில் பாய்மரம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிக்கொடுத்த பெரிய மினரா, தலைமாட்டுமினரா, ஓட்டுமினரா, முதுபக் மினரா ஆகிய 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாகூர் தர்கா பரம்பரை போர்டு ஆப் டிரஸ்டிகள் மற்றும் தற்காலிக நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.