செய்திகள்
உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர்.

வெடிகுண்டு மிரட்டல்- சென்னை ஐகோர்ட்டில் பலத்த பாதுகாப்பு

Published On 2019-09-18 09:02 GMT   |   Update On 2019-09-18 09:02 GMT
வெடிகுண்டு மிரட்டலையடுத்து ஐகோர்ட்டு வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டுக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் குமரனுக்கு வந்த அந்த கடிதத்தில்டெல்லியை சேர்ந்த ஹர்தர்‌ஷன் என்பவரது பெயர் இடம் பெற்றிருந்தது.

நான் சர்வதேச காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன். அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் நான் வருகிற 30-ந்தேதி எனது மகனுடன் சேர்ந்து ஐகோர்ட்டு வளாகத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்ய உள்ளேன் என்று மிரட்டல் கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி ஐகோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் கடிதத்தை அனுப்பியவர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். வெடிகுண்டு மிரட்டலையடுத்து ஐகோர்ட்டு வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் நேற்று மாலை ஐகோர்ட்டுக்கு சென்றார். மூத்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, மணிக்குமார், சசிதரன் மத்திய தொழில் பாதுகாப்பு படை சீனியர் சூப்பிரண்டு ஸ்ரீராம் ஆகியோருடன் கமி‌ஷனர் ஆலோசனை நடத்தினார்.

ஐகோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டலுக்கு பிறகு இது மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஐகோர்ட்டுக்கு வரும் அனைத்து வக்கீல்களும், தங்களது அடையாள அட்டையை கண்டிப்பாக போலீசிடம் காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு பின்னரே போலீசார் கோர்ட்டு வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐகோர்ட்டு பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் கூடுதல் சூப்பிரண்டு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு கடிதத்தையும் அனுப்பியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பெண் வக்கீல்கள் சங்கம் ஆகியவற்றுக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Tags:    

Similar News