செய்திகள்
கைது

பொள்ளாச்சியில் ஒரே பெண்ணை 2 பேர் காதலித்ததால் மோதல்- கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது

Published On 2021-11-24 10:50 GMT   |   Update On 2021-11-24 10:50 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரே பெண்ணை 2 பேர் காதலித்ததால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

பொள்ளாச்சியை சேர்ந்த 17 வயது மாணவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதே பெண்ணை அய்யனார் (19) என்பவரும் ஒருதலையாக காதலித்து வருகிறார். இதனால் அந்த பள்ளி மாணவருக்கும் அய்யனாருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று அய்யனார் தனது நண்பர்களான கல்லூரி மாணவர் அபுல்பஷ் (19), சதாசிவம் (22), கவின் கோகுல் (19), அரவிந்த் (20) ஆகியோரை அழைத்துக்கொண்டு ஜோதி நகர் பகுதிக்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த பள்ளி மாணவரிடம் திடீரென அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனைப் பார்த்த பள்ளி மாணவரின் நண்பர்கள் கவுதம் (21) மற்றும் விஜய் (20) அங்கு சென்று பள்ளி மாணவருக்கு ஆதரவாக பேசினர்.

இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அய்யனார் மற்றும் அவரது நண்பர்கள் கவுதம் மற்றும் விஜய்யை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் கவுதம் மற்றும் விஜய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து கவுதம் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர் அபுல்பஷ், கவின் கோகு, அரவிந்த் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தகராறின் போது அய்யனாருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தப்பி ஓடிய சதாசிவத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News