நீலகிரி மாவட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவிப்பு
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, கூடலூர் அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஊட்டியில் கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி கர்ப்பிணிகள், வெளி நோயாளிகள் மற்றும் இதர நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நீலகிரியில் தொகுப்பூதிய அடிப்படையில் 3 மாதத்துக்கு கூடுதலாக டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 3 மாத காலத்திற்கு வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை பணிபுரிய சுகாதார பணிகள் துணை இயக்குனர் மூலம் பொது மருத்துவர் (எம்.பி.பி.எஸ்) தகுதியுடைய மருத்துவ அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படவுள்ளனர். மேலும், தேவைக்கேற்ப பணி நீட்டிப்பு செய்யப்படும்.
அதன்படி, எம்.பி.பி.எஸ் முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து தகுதி உள்ளவர்கள் மாதம் ரூ.60 ஆயிரம் என்ற தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். கல்வி சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ், அடையாள அட்டை, மருத்துவக் கவுன்சில் பதிவு சான்றிதழ், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். எனவே, விருப்பமுள்ளவர்கள் ஊட்டியில் சி.டி.ஸ்கேன் மையம் அருகில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தை மேற்கண்ட ஆவணங்களுடன் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 8903216454 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.