செய்திகள்
வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் (கோப்பு படம்)

வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பு

Published On 2019-10-22 02:13 GMT   |   Update On 2019-10-22 02:13 GMT
பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று (செவ்வாய்கிழமை) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பேர் பங்கேற்க இருப்பதால் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை :

கடந்த மாதம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக குறைக்கப்படும்” என்று அறிவித்தார். இதனால் 6 வங்கிகள் குறிப்பிட்ட 4 வங்கிகளுடன் இணைக்கப்படுகின்றன. இந்த வங்கிகள் இணைப்பு முயற்சிக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, வங்கிகள் இணைப்பு திட்டத்தை கைவிடக்கோரி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள் இன்று (செவ்வாய்கிழமை) ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்வதாக நோட்டீஸ் வெளியிடப்பட்டன.

இதைத்தொடர்ந்து டெல்லியில் மத்திய தலைமை தொழிலாளர் ஆணையர், தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய வங்கிகள் சங்கம், நிதி அமைச்சகம், நிதித்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.



பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய வங்கிகள் சங்கம் வேலைநிறுத்தத்தை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று டெல்லியில் தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தத்தில் 5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். ஆனாலும் வங்கி அதிகாரிகளும், தனியார் வங்கிகளும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையை பொறுத்தவரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று காலை 10 மணிக்கு வங்கி ஊழியர்களின் பேரணி நடைபெறுகிறது. இதேபோல் மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டங்கள் நடக்கிறது.

வங்கி ஊழியர்கள் போராட்டம் காரணமாக வங்கிகள் இன்று திறந்திருந்தாலும் வங்கி பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News