வழிபாடு
சுவாமியும், அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்த காட்சி.

பேரூர் பட்டீசுவரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2021-12-20 08:30 GMT   |   Update On 2021-12-20 08:30 GMT
ராஜகோபுர வாயில் பூஜை, மாணிக்கவாசகர் திருஊடல் நிகழ்ச்சியும் நடந்தது. அதனை தொடர்ந்து நடராஜரும், சிவகாமி அம்மனும் கனகசபை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர்.
கோவை மாவட்டம் பேரூரில் பட்டீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரின விழா கடந்த 11-ந் தேதி கனகசபை மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு காப்பு அணிவித்தலுடன் தொடங்கியது.

தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணிக்கவாசகர் திருவீதி உலாக்களும், திருவெம்பாவை உற்சவங்களும் நடந்தது.

ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு பட்டீசுவரர், பச்சை நாயகி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து காலசந்தி பூஜை நடத்தப்பட்டு, நடராஜர், சிவகாமியம்மன், மாணிக் கவாசகர், சடையநாதர் ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது.

4 மணியளவில் பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதனை தொடர்ந்து, ருத்ர கலச தீர்த்தாபிஷேகமும் நடைபெற்றது.

6 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்மனுக்கு புது அங்கவஸ்திரம் சாத்துப்படி செய்யப்பட்டது. 7.30 மணிக்கு கோ பூஜையும், அதனை தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

காலை 9 மணிக்கு சுவாமி அலங்கார கோலத்தில் வலம் வந்து, ராஜகோபுரம் வழியே வெளியே வந்து, கோவில் முன்பு உள்ள அரசமரத்தடியில் 3 முறை வலம் வரும் பட்டி சுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் கோவிலின் வெளி வீதியில் மேள தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி சுவாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

ராஜகோபுர வாயில் பூஜை, மாணிக்கவாசகர் திருஊடல் நிகழ்ச்சியும் நடந்தது. அதனை தொடர்ந்து நடராஜரும், சிவகாமி அம்மனும் கனகசபை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர்.

ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலை முதலே கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
Tags:    

Similar News