செய்திகள்
கொரோனா வைரஸ்

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-09-15 03:52 GMT   |   Update On 2021-09-15 03:52 GMT
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்த மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் தொற்று குறைய தொடங்கியதால் முதல்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 395 பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவனுக்கு முதல் முறையாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் கோபி கல்வி மாவட்டம் சிறுவலூர் மணியக்காரன் புதூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அந்தியூர் அடுத்த பருவாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கவுந்தப்பாடி மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேருக்கும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளியில் பணிபுரியும் 41 ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் உள்பட 407 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட் டது.

இதில் மேலும் பிளஸ்-1 மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தியூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 746 மாணவிகள் படித்து வருகின்றனர். 34 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த மாணவி அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவிகள் உள்பட 780 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுபோல் பவானி பகுதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பள்ளியில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவருடன் படிக்கும் மற்ற மாணவிகள் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

பரிசோதனை செய்து கொண்டவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்த மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News