செய்திகள்
இலங்கையில் வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்துகள் மீது துப்பாக்கி சூடு
இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்துகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொழும்பு:
இலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9-ந்தேதி முடிகிறது. இதையொட்டி, அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சீட்டு முறையில் நடைபெறும் அதிபர் தேர்தலில் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களிக்கின்றனர்.
மொத்தம், 35 வேட்பாளர்கள் அதிபர் பதவிக்கான களத்தில் உள்ளனர். எனினும், முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா (52) ஆகியோருக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், வடமேற்கு இலங்கையில் மன்னார் பகுதியில் முஸ்லிம் வாக்காளர்களை ஏற்றி வந்த 2 பேருந்துகள் மீது மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசி தாக்கியதுடன் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.